அரை கட்டு கொத்தமல்லித்தழைகளைச் சுத்தமாக அலசவும். லேசாக தண்ணீர்விட்டு விழுதாக அரைத்து வடிகட்டவும். அந்தச் சாற்றில் பஞ்சைத்தொட்டு தலையில் தடவி, அரை மணி நேரம் ஊறியதும், சீயக்காய் உபயோகித்து அலசவும்.
கற்றாழையின் உள்ளே இருக்கும் ஜெல்லை மட்டும் எடுத்து நான்கைந்து முறை அலசவும். பிறகு அதனுள் சிறிது வெந்தயத்தை வைத்து மூடவும். மறுநாள் கற்றாழை ஜெல்லுடன் வெந்தயத்தையும் சேர்த்து அரைத்து கூந்தலில் தடவி அரை மணி நேரம் ஊறியதும் கூந்தலை அலசவும்.
ஒற்றைச் செம்பருத்திப் பூக்களைச் சிறிது தேங்காய் எண்ணெயில் போட்டுக் காய்ச்சி, வடிகட்டி, ஆறவைக்கவும். இரவு தூங்கச்செல்வதற்கு முன் அந்த எண்ணெயைத் தலையில் தடவி மசாஜ் செய்யவும். மறுநாள் காலையில் அலசிவிடவும்.
பாதாம் எண்ணெய், நெல்லிக்காய்ச்சாறு சம அளவு எடுத்துக்கொள்ளவும். கூந்தலைப் பகுதிகளாகப் பிரித்து இந்தக் கலவையைத் தடவி, மசாஜ் செய்து, சிறிது நேரம் அப்படியே விடவும். பிறகு ஷாம்பூ குளியல் எடுக்கவும். வாரம் ஒருமுறை இந்தச் சிகிச்சையைச் செய்துவந்தால் கூந்தல் வலுப்பெறும்.